வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம்,தமிழ் புத்தாண்டுடன் 2611 நாட்களை கடந்துள்ளது.
காணாமல் போன எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க 2611 நாட்களாகப் போராடி வருகிறோம். இந்தநிலையில் "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மைக்கான அவர்களின் முயற்சியில் எங்கள் போராட்டத்தை அங்கீகரித்தமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்கவும் கோரிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அவர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்
கடந்த மாதம், அமெரிக்க காங்கிரஸ் பெண்மணி டெபோரா ரோஸ் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜான்சன் ஆகியோர் ஈழத் தமிழர்கள் "ஜனநாயக ரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம்" மற்றும் "நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு" பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர்.
ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் முள்ளிவாய்க்காலில் தமிழர் படுகொலை இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆயுதப் போரின் முடிவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ்க் குடும்பங்கள் 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு-கிழக்கு முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன
எனினும் பல வருடங்களாக இந்த குடும்பங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றபோதிலும், இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் இதுவரை தவறிவிட்டதாக தமிழ் காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.